2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! part 5




“அறிவியல், அறிவியல் என்று இதுவரை காலமும் எமக்குப் படம் காட்டிவிட்டு, திடீரென உலகம் அழியத்தான் போகிறது என்பது போலப் பயம் காட்டுகிறாரே இந்த ஆள்” என்று நீங்கள் என்னைப்பற்றி, கடந்த பதிவை வாசித்ததிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கலாம். “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் பயமாக இருக்கிறது” என்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் சொன்னது போலத்தான், உலக அழிவு பற்றி நானும் சொல்ல வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து, மாபெரும் மர்மமான உலக மகா பயங்கரம் ஒன்று தன் வாயை ‘ஆ’ எனத் திறந்து எம்மை விழுங்கக் காத்திருக்கிறது. பல இக்கட்டுகளைத் தாண்டி இன்று அவற்றைப் பற்றி முழுமையாக உங்களுக்கு நான் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்திருக்கிறேன்.
ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளின்படி, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிவதாயின் எந்த எந்த வகையில் அழியலாம் என்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி….,
1. சூரியன், பால்வெளி மண்டலத்தில் உள்ள கருப்புப் பள்ளத்தினாலோ (Dark Rift) அல்லது கருந்துளையினாலோ (Black Hole) ஈர்க்கப்பட்டு அழியலாம்.
2. பூமியின் வட, தென் துருவங்களுக்கு ஊடாகச் செல்லும் அச்சு இடம் மாறி (Pole Shift), பூமியின் காலநிலை மாற்றங்களினால் அழியலாம்.
3. விண்ணில் சுற்றித் திரியும் மிகப் பெரிய விண்கற்களில் (Asteroid) ஏதாவது ஒன்று தாக்கி பூமியில் அழிவுகள் ஏற்படலாம்.
4. பிளானெட் எக்ஸ் (Planet X) அல்லது நிபிரு (Nibiru) என்று சொல்லப்படும் கோள் தாக்குவதால் பூமி அழியலாம்.
5. சூரியனில் ஏற்படும் அதியுயர் மிகைவெப்பப் பாய்ச்சலால் உருவாகும் மின்காந்தக் கதிர்களின் தாக்கத்தால் பூமி அழியலாம்.
இப்படிப் பல விதங்களில் பூமி அழியும் என்று அவர்கள் சொன்னாலும், அவற்றில் சில உண்மையாகவே நடப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளில் பலர் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, அந்த அழிவுகளில் மிக முக்கியமாக சொல்லப்படுவது சூரியனின் மின்காந்தக் கதிர்த் தாக்குதலைத்தான்.
இவற்றில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை உண்டு, எந்த அளவுக்குப் பொய் உண்டு என்பதைச் சாதாரணமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள, எந்த நாட்டு அரசுகளும் முன்வரவில்லை. நாட்டின் நலன்களும், நாட்டு மக்களின் நலன்களும்தானே அரசுகளுக்கு முக்கியம். அப்படி இருக்க ஏன் அரசுகள் இவற்றைச் சொல்லத் தயங்குகின்றன? உண்டு, இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியதுதானே! ஏன் இன்றுவரை எந்த அரசும் இது பற்றி தன் வாயைத் திறக்கவே இல்லை? மக்கள் இவற்றை அறியக் கூடாது என இந்த அரசுகளைத் தடுப்பது யார்?
இவற்றைக் கூர்மையாகப் பார்த்தால், உலக மக்களைச் சுற்றி, அவர்களை அறியாமலேயே ஒரு மிகப் பெரிய சதிவலை பின்னப்பட்டு வருகிறதோ எனச் சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்தச் சதிக்குக் காரணமாக இருப்பவர்கள் உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் மிகப் பெரிய சக்திகளே என்னும் சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது. எனது தனிப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையை மட்டும் வைத்து, இந்தச் சதிகள் பற்றிச் சாதாரணமாக உங்களுக்கு நான் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் பாதுகாப்பு நிறைந்தவனோ, பெரியவனோ கிடையாது. இவற்றை வெளி உலகுக்கு வெளியிடத் துணிச்சலும், பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது. காரணம், இங்கு குற்றம் சாட்டப்படும் சக்திகளின் வீரியம் மிகப் பெரியது.
நான் சொல்லப் போகும் சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே பலர் கருத்து வெளியிட்டிருந்தாலும், அதில் முக்கியமானவர் என்று கருதப்படும் ஒருவரைக் குறிப்பிட்டு உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர் பெயர் ஜெஸ்ஸி வென்டூரா (Jesse Ventura). அமெரிக்க மல்யுத்தம் (American Wrestling) என்னும் மிகப் பயங்கமாக மோதும் மல்யுத்தப் போட்டிகளை, நீங்கள் நிச்சயம் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அந்த மல்யுத்தத்தில் ஒரு பிரபலமான வீரராக இருந்தவர்தான் இந்த ஜெஸ்ஸி வென்டூரா. இவரை நாம் ஒரு மல்யுத்த வீரர் என்னும் சிறிய கூட்டுக்குள் வைத்து அடைத்துவிட முடியாது. அதையும் தாண்டி இவர் பன்முகத் தன்மை கொண்டவர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னொல்ட் ஸ்வார்ட்ஸநெகர் (Arnolt Schwarzenegger) போல, ஜெஸ்ஸி வென்டூராவும் அமெரிக்காவின் மினஸொட்டா (Minnesota) மாநிலத்தின் கவர்னராக இருந்திருக்கிறார். அத்துடன் இவர் ஒரு சினிமா நட்சத்திரமும் கூட. பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். இதில் விசேசம் என்னவென்றால் இவரும் ஸ்வார்ட்ஸநெகரும் சேர்ந்து ‘பிரெடேட்டர்’ (Predator) என்னும் வெற்றிப் படத்தில் நடித்துள்ளனர்.


தற்போது இந்த ஜெஸ்ஸி வென்டூரா, உலகில் நடக்கும் சதிகளைத் தொலைக்காட்சி மூலம், வெட்ட வெளிச்சத்துக்குத் துணிச்சலாக கொண்டுவருகிறார். நான் இனி தரும் விபரங்கள் இவரும், வேறு பலரும் வெளிக்கொண்டு வந்தவையாக இருக்கும். ஆனாலும் ஆதாரத்துக்காக, ஒருவரையாவது உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற நிலையில் இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இனி நான் தரும் எல்லாமே அதிர்ச்சி தரும் தகவல்களாகவே இருக்கும். எனது தொடரின் உச்சக்கட்டமாக அமைவதும் இவைகளாகத்தான் இருக்கும். இவற்றை நீங்கள் வாசிக்கும்போது, உங்களால் நம்பவே முடியாமல் போகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எனவே தயங்காமல், நான் தரும் தகவல்களையும், பெயர்களையும் கொண்டு கூகிள் (Google) மூலமாகவும், யூட்யூப் (Youtube) மூலமாகவும், வேறு இணையத் தளங்கள் மூலமாகவும் தேடினீர்களென்றால், தகவல்கள் அருவி போல கொட்டும்.
இதற்கு மேலும் இது பற்றி விளக்கிக் கொண்டிருக்காமல் விசயத்துக்குப் போகலாம் வாருங்கள்…….!
உலக மக்கள் அனைவரையும் உண்மையை அறிய விடாமல் தடுக்கும் இந்த சக்திகள் யார்? ஏன் இவர்கள் தடுக்கிறார்கள்? என்பன மில்லியன் டாலர் கேள்விகள். இந்த மில்லியன் டாலர் கேள்விகளுக்குப் பதில், பல இடங்களிலிருந்து எமக்குக் கிடைக்கிறது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். முதலில் நாம் அமெரிக்காவில் உள்ள ‘கொலராடோ’ (Colorado) மாநிலத்தில் அமைந்த ‘டென்வெர் விமான நிலையத்தில்’ (Denver Airport) இருந்து எமது தேடலை ஆரம்பிக்கலாம். நீங்களும் ஒருதரம் ஆசுவாசமாக மூச்சை விட்டுக் கொண்டு வாசிப்பதற்குத் தயாராகுங்கள்……..!
சாதாரணமாகப் பார்த்தால் பயணிகள் சுறுசுறுப்பாகப் பயணத்தில் ஈடுபடும் ஒரு விமான நிலையம்தான் இது. ஆனால், அந்தப் பயணிகள் எவருக்கும் தெரியாமல் அங்கே அமைதியாக ஒரு விசயம் நடந்து கொண்டிருக்கிறது. பின்னர் எப்படியோ, இப்படி ஒன்று நடப்பது மெது மெதுவாக கசியத் தொடங்கியதும்தான் மீடியாக்களும் மக்களும் பயத்தில் விழித்துக் கொண்டனர். ஐக்கிய அமெரிக்கப் (USA) பெரு நிலத்தில், நட்ட நடுவே அமைந்தது இந்த டென்வெர் விமான நிலையம். விமான நிலையத்துக்குக் கீழே, மிக ஆழத்தில் பலர் தங்கியிருக்கக் கூடிய கட்டடங்கள், அமெரிக்க அரசினாலேயே அமைக்கப்படுகின்றன. அப்படி அமைக்கப்படும் சுரங்க கட்டடத்தின் நீள அகலம் எட்டுச் சதுரக் கிலோ மீட்டருக்கும் அதிகம். இவ்வளவு மிகப்பெரிய பிரமாண்டமான நிலக் கீழ் கட்டடங்கள், மிக ஆழத்தில் அதுவும் ஒரு விமான நிலையத்திற்கும் கீழே கட்டப்படுவதன் காரணம் என்ன?
இந்த நிலக் கீழ் கட்டடங்கள் எந்த ஒரு அழிவுகளினாலும் பாதிக்கப்பட முடியாதவாறு மிகமிகப் பலம் வாய்ந்த முறையில், நவீனமாக அமைக்கப்படுகின்றன. இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படுவது பற்றி எந்த தகவலும் வெளியே தெரியாமல் மிக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. பாதுகாப்பென்றால், எப்படிப்பட்ட பாதுகாப்பென்று நினைக்கிறீர்கள்? அமெரிக்க இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு இதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டடம் அமைப்பவர்களிடம் இது பற்றிக் கேட்டால் கிடைக்கும் பதில் மௌனம் மட்டும்தான்.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இதை ஆராய்ந்து பார்த்தால், பலமான பாதுகாப்புகளுடன் கட்டப்படும் இந்தக் கட்டடங்கள் உலகம் அழியும்போது, பலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கப்படுகிறது எனத் தெரிய வருகிறது. அதாவது ஒரு நட்சத்திர விடுதியின் வசதிகளுடன் கூடிய பல அறைகளுடன் இது அமைக்கப்படுகிறது. இதை யார் அமைக்கிறார்கள்? எதற்கு அமைக்கிறார்கள் என்ற எந்தக் கேள்விக்கும் அங்கு யாரும் பதில் சொல்லத் தயாரில்லை. எல்லாமே மர்மங்களாக இருக்கின்றன.
கட்டடம் கட்டப்படும் இடத்தில், ‘New World Airport Commission’ என்னும் ஸ்தாபனத்தால் கட்டடம் கட்டப்படுகிறது என்று எழுதப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஸ்தாபனம் பற்றி ஆராய்ந்தால், அப்படி ஒரு ஸ்தாபனம் அமெரிக்காவில் சட்டரீதியாக, எங்குமே பதிவு செய்யப்படவில்லை. அந்தக் கல்வெட்டில் உள்ள சின்னமும், ‘நியூ வேர்ல்ட் ஆர்டர்’ (New World Order) என்னும் பெயரும் எமக்கு முன்னரே பரீட்சயமானதால், பல உண்மைகளையும், பயங்கரங்களையும் அவை சொல்லாமல் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன.
“அட! அவர்களா நீங்கள்?” என்ற ஆச்சரியத்துடன் இதை ஆய்வுக்குட்படுத்தியபோது, கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்த விமான நிலையம் ஒன்றும் மிக முக்கியமான விமான நிலையமோ அல்லது கொலராடோ ஒரு முக்கிய மாநிலமோ கிடையாது. ஆனால் இந்த விமான நிலையத்துக்கு மிக அருகில், சமீபமாகப் பலர் வீடுகளை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த தலையே சுற்றும் போல் உள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் என்று நீங்கள் யார் யாரை நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் அங்கே வீடுகளை வாங்கியிருக்கின்றனர். யார் யார் வாங்கியுள்ளனர் என்ற பெயர்கள் கூட எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் அவற்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உலகின் பணக்காரர்கள் எல்லோரும், ஒரு பிரபலமே இல்லாத சாதாரண இடத்தில் வீடுகள் வாங்கியிருக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல், மிகமிக இரகசியமாக.
சொல்லி வைத்தது போல எல்லாப் பணக்காரர்களும் ஏன் டென்வெர் விமான நிலையத்துக்கு அருகில் வீடுகள் வாங்குகிறார்கள்? ஏன் விமான நிலையத்துக்குக் கீழே, நிலக் கீழ் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன? உலகம் அழியும் நிலை தோன்றினால் அதிலிருந்து காப்பாற்றப்பட ஒரு சிலர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுவார்களா? அந்த ஒரு சிலரில் நானோ, நீங்களோ இல்லாமல் அதிகாரத்தில் உள்ளவர்களும், உலகக் கோடீஸ்வரர்களும் மட்டும்தான் காப்பாற்றப்படுவார்களா?
இந்தக் கேள்விகளின் அடிப்படையிலேயே, சமீபத்தில் வெளிவந்த ’2012′ என்னும் ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தை ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ என்னும் வகையிலேயே நாம் பார்த்தோம். ஆனால், ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் பற்றி விரிவாகப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டோம். அந்தப் படம் எடுக்கப்பட்டதே, உலகம் அழியுமானால், அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களும், கோடீஸ்வரர்களும், அதியுயர் அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் மட்டுமே அந்த அழிவில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதை மையமாக வைத்துத்தான். முடிந்தால் அந்தப் படத்தை ஒரு முறை மீண்டும் பாருங்கள்.
உலக அழிவு பற்றிய பயத்தினால், நாம் இப்படி எல்லாம் அவர்களைப் பற்றி அபாண்டமாகச் சந்தேகப்படுகிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அப்படி இல்லை என்று பதில் சொல்வதற்கு நான், டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களைக் காட்ட மீண்டும் உங்களை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
மனிதனால் செய்யப்படும் தொலைதூரப் பயணங்களில் ஆபத்தானது என்று கருதப்படுவது விமானப் பயணம்தான். பிரயாணிகள் பயணம் செல்லும் விமான நிலையங்கள் உலகெங்குமே அழகானவையாகவும், மனதுக்கு உகந்தவையாகவுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த டென்வெர் விமான நிலையம் எப்படிக் காட்சியளிக்கிறது தெரியுமா? விமான நிலையச் சுவர்களில் விசித்திரமாக, மிகப் பிரமாண்டமாக சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அந்தச் சித்திரங்கள் அனைத்தும் சொல்வது வேறெதைப் பற்றியுமல்ல, உலக அழிவைப் பற்றித்தான்.
விமான நிலையத்துக்குக் கீழே உலக அழிவில் இருந்து தப்பிக் கொள்ளப் பாதுகாப்பான இடம். மேலே உலக அழிவைச் சொல்லும் சித்திரங்கள். கீழே கட்டப்படுவது வெளியே தெரியவராது என்ற நினைப்பில், குறியீடாக இந்த உலக அழிவு அங்கு சித்திரமாக வையப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு விமான நிலையத்திலாவது இறந்த உடல்கள், சவப்பெட்டிகள், மனித அவலங்கள் எனச் சித்திரங்கள் வரைவார்களா……..? ஆனால் டென்வெர் விமான நிலையத்தில் வரைந்திருக்கிறார்கள். அந்தச்  சித்திரங்களில் சிலவற்றை நீங்களே பாருங்கள்………!




படங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கு உங்களுக்குத் தர முடியவில்லை.
அதிகம் எதற்கு? எந்த விமான நிலையத்திலாவது பயணப் பெட்டியினுள் இருந்து சாத்தான் வெளிப்படுவது போல சிலை செய்து வைத்திருப்பர்களா? அதுவும் இருக்கிறது அங்கே!
எல்லாம் சரி, உலகம் அழிவது என்றால் மாயன் இல்லாமல் ஒரு உலக அழிவா…? அதுவும் அங்கே காணப்படுகிறது. மாயன் இனத்துச் சிறுமி ஒருத்தி, மாயன்களின் சுவர் ஓவியத்தின் பகுதியொன்றைத் தன் கைகளில் ஏந்தியபடி இருப்பதும் அந்தச் சித்திரங்களில் காணப்படுகிறது. இது மேலதிக பயத்தை எமக்கு ஏற்படுத்துகிறது. அதையும் பாருங்கள்.
இங்குமா மாயன் என்று ஆச்சரியம் வரவில்லையா…?
இந்தச் சித்திரங்கள் பற்றி நிறையவே விமர்சித்துக் கொண்டு போகலாம். அவ்வளவு உலக அழிவு பற்றிய விபரங்கள் அடங்கிய சித்திரங்கள் அங்கு வரையப்பட்டிருக்கின்றன. ஒரு விமான நிலையத்தில் அப்படிச் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பது அசாதாரணமானவை. ஆனால் ஏன்…..?
இந்த டென்வெர் விமான நிலையத்தின் நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்ட சுரங்க நகரைப் போல, அமெரிக்காவில் மட்டும் மொத்தமாக பதினெட்டு இடங்களில் நிலக் கீழ்ச் சுரங்கங்கள் இராணுவப் பாதுகாப்புகளுடன் இரகசியமாக அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உலகெங்கும் பல இடங்களிலும் மிக இரகசியமாக, பல கட்டடங்கள் இப்படி அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நிலக் கீழ் நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எதற்கு? இவ்வளவு பணச் செலவுகளுடன் காரணமில்லாமல் யாரும் இவற்றை அமைப்பார்களா..?


மேலே படங்களில் உள்ளவை, அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலக் கீழ் நகரங்கள். வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாகக் காணப்படும் இவை உள்ளே மிகப் பிரமாண்டமானவை.
அமெரிக்கா என்னும் நாட்டில் அநேக இரகசியங்கள் மீடியாக்களினால் வெகு சுலபமாக வெளிவந்து விடுகின்றன. ஆனால் அமெரிக்கா தவிர்த்து சீனா, ரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி அல்ல. அங்கு என்ன என்ன கட்டடங்கள் அமைக்கப் படுகின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியங்கள். இதனாலேயே நான் முன்னர் சொன்ன ’2012′ என்னும் ஆங்கிலப் படத்தின் இறுதியில் கூட, உலக உயர் சக்திகள் சீனாவில் இணைவதாகக் காட்டியிருந்தார்கள்.
இவை மட்டுமல்ல எம்மை ஆச்சரியப்படுத்துபவை. இதைவிட இன்னுமொன்றும் உண்டு. அதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுவும் தெரிந்து விட்டால், உலகம் அழியுமா என்னும் சந்தேகம் வருவதற்குப் பதில், அழியும் என்னும் நம்பிக்கையே உங்களுக்கு ஏற்பட்டுவிடும். இதைத் தெரிந்து கொள்ள ஐரோப்பா, ஸ்காண்டினேவியா நோக்கி எம் பார்வையைத் திருப்ப வேண்டும்.
நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் ‘ஸ்வால்பார்ட்’ (Svalbard) எனும் தீவு ஒன்று உண்டு. எங்கு பார்த்தாலும் மலைகளும், அவற்றில் நிறைந்திருக்கும் பனிகளுமாகவே அந்த இடம் எப்போதுமே காட்சியளிக்கும். இந்த இடமும் டென்வெர் விமான நிலையத்தைப் போல மிக முக்கிய இடமாக இப்போது இருக்கிறது. அது என்ன தெரியுமா…?
சொல்கிறேன்……!
உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும் (Seeds), கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில், டன் டன்னாக அங்கு பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது. ஒன்பது மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு, மலைகளைக் குடைந்து, நிலத்தடிச் சுரங்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் இந்த விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. உலகம் அழிந்தாலும், இவற்றிற்கு எந்தப் பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் செலவு செய்து குளிர்பதனப்படுத்தப்பட்டு இவை பாதுகாக்கப்படுகின்றன.
உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில், அதன் பின்னர் உருவாகும் மாற்று உலகத்தில், அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மரம் செடிகளை உற்பத்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. உண்ண உணவின்றிப் பல நாடுகளில் மக்கள் உயிர்களை விட்டுக் கொண்டிருக்கும்போது, இல்லாத அழிவு ஒன்றை எதிர்பார்த்து இவ்வளவு செலவில் இப்படி ஒரு பாதுகாப்பு வைப்பகம் எதற்காக?







இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும்? பூமியின் வட, தென் துருவத்திற்கான அச்சு தனது தடத்திலிருந்து இடம் மாறினால் (Pole Shift), தற்சமயம் வெப்ப வலயப் பிரதேசமாக இருக்கும் இடங்கள், குளிர்ப் பிரதேசங்களாகவும், குளிர்ப் பிரதேசங்கள் வெப்ப வலயப் பிரதேசங்களாகவும் மாறும் ஆபத்து உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஏனோ ஞாபகத்திற்கு வரவில்லையா?


 உலகம் அழியும் ஒரு நிலை ஏற்படுமாயின், மரங்களைப் பாதுகாக்கும் இடம் வெப்ப வலயப் பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறலாம். அழிவிலிருந்து காப்பாற்றப்படும் சில மனிதர்களால், வெப்ப வலயமாக மாறியிருக்கும் இந்த நோர்வே பகுதியில் மீண்டும் ஒரு மனித நாகரீகத்தை உருவாக்கும் திட்டம் யாராலும் உருவாக்கப்பட்டதா?
மனிதர்கள் அங்கே! மரங்கள் இங்கே! என்ற இந்த புத்திசாலித்தனமான செயல்களை எல்லாம் இவர்களுக்குச் செய்வதற்கு கட்டளையிட்டவர்கள் யார்? இவையெல்லாவற்றையும் யார் அமைக்கிறார்கள்? உலகப் பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும், பெரும் சக்தி வாய்ந்தவர்களையும் எந்த சக்தி ஒன்றிணைக்கிறது? நிச்சயமாக இதை ஒரு பலமான சக்தி இருந்து கொண்டுதான் இணைக்க வேண்டும் அல்லவா?

 இங்கு நான் கொடுக்கும் எந்தத் தகவலும், எனக்குச் சொந்தமானவை அல்ல. இவைகளின் உண்மைத் தன்மை பற்றி என்னிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால் பல ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள், காணொளிகள் என இணையங்களிலும், அச்சு வடிவங்களிலும் ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவை கொட்டிக் கிடக்கின்றன. ‘சதித் தத்துவம்’ (Conspiracy Theory) என்னும் பெயரில், இவை காணொளிகளாக வெளிவருகின்றன. இவை இப்படி இப்படி இருக்கின்றன என்று உங்களுக்குச் சுட்டிக் காட்டுவது மட்டுமே எனது வேலை. அத்துடன் என் கடமை முடிந்து போய் விடுகிறது. படித்த பின் சரியான முடிவுகளை எடுப்பது உங்கள் பொறுப்பு. நான் சொல்லும் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால், நான் சொன்னவை சிறிதளவோ என்று நீங்களே பிரமித்துப் போவீர்கள். சொல்லாதவை மிக அதிகமாக இருக்கும். இதற்கு மேலும் இது பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்………..!
டென்வெர் விமான நிலையம் பற்றியும் நோர்வேயில் அமைக்கப்பட்ட மரங்களின் பாதுகாப்பு மையத்தைப் பற்றியும் நான் எழுதியது உங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை யார் முன்னின்று நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழுந்திருந்தது. அவர்கள் யார் என்பதற்கு ஆதாரம் டென்வெர் விமான நிலையத்திலேயே எமக்குக் கிடைத்தது. டென்வெர் விமான நிலையக் கட்டுமானத்தின்போது, அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பற்றிக் கடந்த பதிவில் கூறியிருந்தேன். அதன் முழுமையான வடிவம் மேலே உள்ள படத்தில் காணப்படுகின்றது. அந்தப் படத்தைச் சரியாகப் பார்த்தீர்களானால், அதில் ஒரு சின்னம் (Symbol) காணப்படுகிறது. அத்துடன் கீழே ‘புதிய உலகம்’ (New World) என்னும் வார்த்தைகளும் காணப்படுகிறது. இவை இரண்டுமே எல்லா மர்மங்களையும் எமக்கு தீர்க்கப் போதுமானவையாக இருக்கலாம்.
அவை என்ன என்றுதான் பார்ப்போமே!
‘புதிய உலக ஒழுங்கு’ என்று தமிழில் சொல்லப்படக்கூடிய ‘The New World Order’ என்னும் அமைப்பு, உலகத்தின் கோடீஸ்வரர்களையும், தொழிலதிபர்களையும், அரசியல் பெரு முதலைகளையும், அதிகார மையங்களின் உச்சங்களில் அமர்ந்திருப்பவர்களையும் தன் அங்கத்தவர்களாகக் கொண்டது என்று சொல்கிறார்கள். ஒரு மாயச் சங்கிலி மூலம் இவர்கள் அனைவரையும் இந்த அமைப்பு இணைத்து வைத்திருக்கிறது. அந்தச் சங்கிலியின் எந்த ஒரு வளையத்திலும் சாதாரண பாமர மக்களான நாங்கள் இருக்கவே முடியாது. இவர்களின் கொள்கை ஒரே ஒரு உலகம், ஒரே ஒரு பணம், ஒரே ஒரு வங்கி என்பதுதான். அதாவது உலக மக்கள் அனைவரையும் ஒரே ஒரு சக்தி ஆள வேண்டும். அவர்களுக்குப் பணமாக ஒரே ஒரு பணம் இருக்க வேண்டும். அந்தப் பணத்தை நடை முறைப்படுத்துவதற்கு ஒரே ஒரு வங்கி இருக்க வேண்டும்.
‘என்னடா இவன் கதைவிடுகிறானே!’ என்று நீங்கள் நினைக்கலாம். சம்பந்தம் உண்டோ, இல்லையோ, இங்கு சொன்னது போல, சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்று இருக்கின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட, உலகத்தில் மிக முக்கியத்துவமும், சக்தியும் வாய்ந்த நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து தனி ஒரு பணமான ‘யூரோ’வை (Euro) உருவாக்கியது எம் கண் முன்னாலேயே நடந்தது. ஆசிய நாட்டிலுள்ளவர்கள் அனேகருக்கு ‘புதிய உலக ஒழுங்கு’ அமைப்புப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தன் முகத்தை ஆசிய நாட்டினர்களுக்குப் பெரிதாகக் காட்டாத இந்த அமைப்பைப் பற்றி அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றனர்.
இதில் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி என்னவென்றால், The New World Order என்னும் அமைப்பை, ‘Free Mason’ என்னும் அமைப்பே கொண்டு நடத்துகிறது என்று சொல்கிறார்கள். இந்த Free Mason அமைப்பு மிகவும் பிரபலம் வாய்ந்தது. அது மட்டுமில்லாமல் பலரால் மர்மம் நிறைந்தது என்றும் வர்ணிக்கப்படுவது. இந்த அமைப்பை ‘மேசனிக்ஸ்’ (Masonics) என்றும் அழைப்பார்கள். இந்த மேசனிக்ஸ் என்பது மதம் சார்ந்தது என்றும், கடவுளுக்கு எதிரானது என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் இருந்தாலும், நாம் அதற்குள் போகத் தேவையில்லை. ஆனால் இந்த அமைப்பு மிகவும் ஆளுமையுள்ள அமைப்பு என்பது மட்டும் உண்மை ஆகும்.
இந்த அமைப்புக்கு எனப் பல சின்னங்கள் இருந்தாலும், கீழே படத்தில் கொடுத்திருப்பதுதான் அதன் முக்கிய சின்னமாகும்.
இந்தப் படத்தில் உள்ள அடையாளத்தையும், டென்வெர் விமான நிலையக் கல்வெட்டில் இருந்த அடையாளத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் மேசனிக்ஸ் அமைப்பு மேலும் சில சின்னங்களைத் தமக்கென வைத்திருக்கின்றது. மேலே படத்தில் காட்டப்பட்ட கணித வரை கருவிகள், ஒற்றைக் கண், ஐந்து நட்சத்திர வடிவம், ஆறு நட்சத்திர வடிவம், கைவிரல்களை மடக்கிக் காட்டும் ஒருவித சைகையான அடையாளம், ஆங்கில ‘G’ என்னும் எழுத்து என்பவற்றுடன் ஆச்சரியகரமாக பிரமிட் சின்னமும் மேசன்களின் சின்னங்களாகும்.



இந்த மேசனிக்ஸ் அமைப்பின் ஆளுமை பற்றிச் சொல்வதானால், நான் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொன்னால் உங்களுக்கு அதன் தீவிரமும், அதிகாரமும் புரியும். அமெரிக்காவின் ஒரு டாலரை உங்களில் அநேகர் பார்த்திருக்கலாம். அந்த ஒரு டாலரில் (One Dollar Note) இருக்கும் படம் இது.


இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள ‘NERVUS ORDO SECLORUM’ என்னும் லத்தீன் வார்த்தைகள் ‘Secular New Order’ என ஆங்கிலத்தில் அர்த்தம் தருகிறது. இது New World Order என்று தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது என்று விக்கிப்பீடியா (Wikipedia) தெரிவித்தாலும், இல்லை இது மறைமுகமாக அதையே குறிக்கின்றது எனப் பலர் அடித்துச் சொல்கின்றனர். அவற்றின் விபரங்களை நீங்கள் பல இணையத் தளங்களில் காணலாம். அது தவிர அமெரிக்க டாலரில் ஏன் லத்தீன் வார்த்தைகள் வரவேண்டும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மேசன்களின் அடையாளமான ஒற்றைக் கண்ணும், பிரமிட் அடையாளமும் அங்கு வர வேண்டிய அவசியமே இல்லை எனக் கேள்விகள் வருகின்றது. அத்துடன் அந்தப் பிரமிட்டின் அடுக்குகள் மொத்தமாக 13 ஆகவும் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப் 13 என்னும் இலக்கம் மேசன்களின் முக்கிய இலக்கங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். சரி, இந்தப் 13 படிகள் என்பது தற்செயலாக அமைந்தது என்று நாம் எம்மைச் சமாதானப்படுத்தினால், அதே டாலரில் இருக்கும் இன்னுமொரு படம் எம்மை அசர வைக்கிறது. அந்தப் படத்தில் இருக்கும் அமெரிக்கக் கழுகு, தன் இடது காலில் வைத்திருக்கும் இலைகளின் எண்ணிக்கையும், வலது காலில் வைத்திருக்கும் அம்புகளின் எண்ணிக்கையும் தற்செயலில்லாமல் 13 ஆக இருக்கிறது. அது மட்டுமா? அதில் செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளின் எண்ணிக்கை 13. மேலே இருக்கும் லத்தீன் எழுத்துகள் மொத்தம் 13. அதற்கும் மேலே இருக்கும் நட்சத்திரங்கள் 13. இதற்கு மேலும் 13 என்பது தற்செயல்தானா என்பதை நீங்களே முடிவு செய்துவிட்டு, படத்தில் எண்ணிப் பாருங்கள்(13 இந்த எண்ணை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் )


“அடப் போங்கப்பா! எதைப் பார்த்தாலும் உங்களுக்குச் சந்தேகம்தான். எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்” என்று நீங்கள் சொல்லலாம். இருக்கட்டும், இதையும் பாருங்கள். அந்த டாலரில் இருக்கும் படத்தில் மேசனின் ஆறுகோண அடையாளத்தை வரையும்போது என்ன வருகிறது என்று தெரிகிறதா? MASON.


ஆச்சரியம் இத்துடன் முடிந்து விடவில்லை. அமெரிக்க ஒரு டாலரின் முன் பக்கம் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனே (George Washington) ஒரு மேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.






ஆபிரகாம் லிங்கன், கென்னடி ஆகிய இருவர் தவிர்த்து, அமெரிக்க ஜனாதிபதிகளில் அனைவரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்துகளை முன்னணியில் வைத்து ‘நிக்கலஸ் கேஜ்’ (Nicolas Cage) நடித்து வெளிவந்த National Treasure (The Book of Secrets) என்னும் ஆங்கிலப் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றன. முடிந்தால் அவற்றைப் பாருங்கள். அத்துடன் அந்தப் படத்தின் போஸ்டர்களில் பிரமிட்டுக்குள் இருக்கும் ஒற்றைக் கண்ணையும் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.




இந்து மதத்தின் சின்னங்களில் ஒன்றான ஸ்வஸ்திக் சின்னத்தை, ஹிட்லர் தனக்கென்று ஒரு சின்னமாக மாற்றிவிட்டது சரித்திரத்தில் நடந்தது. அது போல, இன்னுமொரு சின்னத்தையும் தங்களுக்கென வைத்துக் கொண்டார்கள் மேசன்கள். அது அவர்கள் கைகளாலேயே காட்டும் ஒரு சின்னம். அதை அமெரிக்காவின் எத்தனை பெருந் தலைகள் பாவித்திருக்கின்றனர் என்று நீங்களே பாருங்கள். இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். பல கொடுக்க முடியவில்லை.





இங்கு ஒரு விசயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களெல்லாம் மேசனாக இருந்தால், அப்படி இருப்பதில் எந்தத் தவறும் கிடையாது. மேசன் என்பது மறைந்து தொழிற்படும் ஒரு அமைப்பல்ல. வெளிப்படையாகவே இயங்கும் ஒரு அமைப்பு அது. அதில் அங்கத்தவர்களாக இருப்பது ஒன்றும் தவறானது அல்ல. உலகில் அதி உச்சத்தில் இருப்பவர்கள் பலர் ‘நான் ஒரு மேசன்’ என்று சொல்லத் தயங்கியதே இல்லை. ஆகையால் இங்கு அமெரிக்க ஜனாதிபதிகளைக் குறிப்பிடும்போது, அவர்கள் தவறு செய்பவர்கள் என்று சொல்வது என்பதல்ல அர்த்தம். மேசன்கள் பற்றிய ஒரு மர்மமான கருத்து உலகில் பலமாக உலவுகிறது என்பதை இங்கு சொல்லி, அதற்கு மேலும் சொல்வதற்காக இவற்றையும் சொல்ல வேண்டி இருக்கிறது அவ்வளவுதான். அதிகம் ஏன், ஜார்ஜ் வாஷிங்டன் போல, ஜார்ஜ் புஷ் கூட மேசன்களுடன் இருக்கும் படங்கள் வெளிப்படையாகவே கிடைக்கின்றன. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன்.









Comments

Popular posts from this blog

அலெக்ஸாண்ட்ரியா நூலகம் (Library of Alexandria)

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

முருங்கை கீரை